Saturday, June 27, 2009

ரகசியங்கள் !!!

பாத்துக்கோ பாத்துக்கோ நானும் தொடர் சங்கிலி இடுகை எழுதியிருக்கேன்.... (வ்டிவேலு பாணியில் படிப்பதும், சரவணா ஸ்டோர்ஸின் விளம்பரப்பட பாணியில் படிப்பதும் உங்களின் விருப்பத்திற்க்கு விடப்படுகிறது!!!)


1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

பிடிக்கும். கல்கி என்றால் தன்னைத்தானே செதுக்கும் சிற்பத்தின் பெயர் என்று என் தோழி சொன்னது. கல்லூரிக்காலம் முதலே இந்தப் பெயரில் ஈடுபாடு உண்டு. அதனால் நானே வைத்துக் கொண்டது.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

அதெல்லாம் கணக்குல வைக்க முடியாதுங்க... ரொம்ப மனசைத் தொடுறா மாதிரி பாட்டு கேட்டாக்கூட அழுகை வரும். இப்போதான் டி.வில டெமி லொவேட்டோ கண்ணு கலங்குனதப் பாத்து நானும் அழுதுட்டு வரேன். :-)

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

எனக்கு பிடிக்கும். (மத்தவங்க படிக்கிறதுதான் கொஞ்சம் கஷ்டம். 15 பேப்பர் இருக்குற அஸைன்மென்ட 5 பேப்பர்ல எழுதுறவங்க நாங்க. )

4. பிடித்த மதிய உணவு என்ன?

வீட்டில் என்றால், அப்பா வைக்கும் சாம்பாரும், அம்மா வைக்கும் அவியலும்.

சென்னையில் இருந்தவரை அஞ்சப்பரின் பிரியாணியும், சிக்கன் 65/பிங்கர் பிஷ்

இப்போ நான் சமைக்கும் எல்லாமே (நம்ம சமைச்சது நமக்கே புடிக்கலின்னா வேற யாருக்கு புடிக்கும்??)

5. நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

ம்ம்ம்ம்... வச்சிக்குவேன்.

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

ரெண்டுமே...ஆனா அருவிக்குத்தான் முதல் இடம். கடலில் என்றால் அது எந்த அளவுக்கு குப்பை இல்லாமல் இருக்கிறது என்பதைப் பொறுத்து.

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முதலில் அவர்கள் நம்மை எப்படி பார்க்கிறார்கள் என்பதை. அடுத்தது அவர்களின் உடல் மொழியை.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்சது: யார் நல்லது சொன்னாலும் மனசுல வாங்கிட்டு அதுபடி நடக்க முயற்சி பண்ணுறது. முடிஞ்சவரைக்கும் கூட இருக்குறவங்களுக்கு உண்மையா இருக்குறது.

பிடிக்காதது: யார்கிட்டயாவது தோணுனதை சொல்லுறேன்னு போய் வாங்கிக் கட்டிக்கிறது.

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்தது: பொறுமை

பிடிக்காதது: -------------- (அப்புறமா நிரப்பிக்கலாம், பொறந்த நாள் வருது, ஒரு பெரிய லிஸ்டே வச்சிருக்கேன், இப்ப எதையாவது சொல்லி அதைக் கெடுக்கணுமா? :-))

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

ம்ம்ம்ம்... வருத்தமெல்லாம் இல்லீங்க... சில நேரங்களில் பிரிவுகள்தான் உறவுகளை வலுவாக்கும்.

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

வயலெட் நிற நைட்டி.

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

மானிட்டர் பாத்து டைப் பண்ணிட்டு இருக்கேன். (இப்போதைக்கு பாட்டு எதுவும் போடலை)

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கருப்புத்தான்..

14. பிடித்த மணம்?

ரோஜாப்பூ மணம்


15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

நிறைய பதிவர்கள் பிடிக்கும். எல்லோருமே இந்த தொடர் விளையாட்டை பெரும்பாலும் முடித்து விட்டார்கள். இன்னும் அனுமதி கேட்கவில்லை, இருந்தாலும் அழைப்பது ஷண்முகப்பிரியன் சார் அவர்களை. எதிர்மறையான விமர்சனங்களையும் நல்ல விதத்தில் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை நாம் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

(சார் உங்களிடம் கேட்காமலேயே தொடர் விளையாட்டுக்கு அழைத்ததற்க்கு மன்னிக்கவும்.)

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

அக்பர் அண்ணன். இப்போதான் எழுத ஆரம்பித்திருக்கிறார். இரண்டு வருடங்கள் வாசகனாக இருந்த அனுபவத்தினால் இன்னும் நல்ல படைப்புகள் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.


17. பிடித்த விளையாட்டு?

இறகுப்பந்து, கைப்பந்து, சதுரங்கம்.

18. கண்ணாடி அணிபவரா?

வெயிலுக்கு குளிர்க்கண்ணாடி அணியும் பழக்கம் உண்டு.

19. எப்படிப்பட்ட திரைப் படம் பிடிக்கும்?

நகைச்சுவை & உணர்வுப்பூர்வமாக ஈர்க்கும் படம்.

20. கடைசியாகப் பார்த்த படம்?

இணையத்தில் அயன்,
தியேட்டரில், ஏஞ்சல்ஸ்&டீமோன்ஸ்

21. பிடித்த பருவ காலம் எது?

ம்ம்ம்ம். பள்ளிக்காலம் வரை மழைக்காலம்தான். (மழை வந்தால் எங்க ஸ்கூல் லீவு விட்டுடுவாங்க)
இப்போ எல்லாமே பிடிக்குது, எல்லா பருவ காலங்களும் ஒவ்வொரு விதத்துல அழகாத்தெரியுது.

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

புத்தகம் படிச்சு ரொம்ப நாளாச்சு . இப்போதைக்கு பதிவுலகம் மட்டும்தான்

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?

இப்போது உபயோகிப்பது கணவரின் அலுவலக மடிக்கணினி, அதனால் படம் எதுவும் வைக்கவில்லை.
என்னுடைய மடிக்கணினி இருந்தபோது, என்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் எடுத்ததும் மாற்றிவிடுவேன்.


24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்தது:: இரைச்சலில்லாத எல்லா சத்தமும்.

பிடிக்காதது: காலையில் அடிக்கும் அலாரம் சத்தம்


25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

அமெரிக்கா வரை.


26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

அப்படி எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எல்லோரையும் போல சாதாரண வழக்கமான செயல்கள்தான்.
27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

கூடயே இருந்து குழி பறிக்கிறது
28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம் , பிடிவாதம்.
29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

கேரளா (இன்னும் போனதில்லை)

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

நல்லவர்கள் புடைசூழ, பிரச்சனையே இல்லாத வாழ்க்கை வாழணும்ன்னு ஆசை.

31.கணவன்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

வீட்டை சுத்தம் பண்ணுவது. (தலைவர் வீட்டுல இருந்தா சுத்தம் பண்ணுறது வேஸ்ட். 10 நிமிஷத்துல பழைய நிலைமைக்கு வந்துடும்)

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும்,
போர்க்களங்கள் மாறலாம் போர்கள் மாறுமா!!!

(இது சினிமா டயலாக்ன்னு தெரியாம சின்ன வயசுல சொல்லிட்டு திரிஞ்சிருக்கேன். ஆனா ரொம்ப பிடிச்ச வரிகள்.)

P.S: பதில்களை படித்துவிட்டு நாராயணா இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலடான்னு புலம்புகிறவர்கள், ஒரு சின்ன டைவர்சன் எடுத்து அக்பர் அண்ணனின் வலைத்தளத்தில் போய் திட்டுங்கள். அவர்தான் என்னை எழுத சொன்னது. :-)

Friday, June 12, 2009

பொண்ணு/பையன் பாக்குறீங்களா? அப்போ இந்த பதிவையும் பாருங்கோ...!!!

மோகன் அண்ணானோட இந்த பதிவு படிச்சப்புறம் எழுதணும்னு தோணுன பதிவு இது...

பொண்ணு/பையன் பாக்கும் போது நிறைய விஷயங்கள் இருக்கு.

உதாரணத்துக்கு இந்த போன் மேட்டரையே எடுத்துக்குவோம். ரொம்ப வளவளன்னு பேசுறது வெகுளித்தனத்தின் வெளிப்பாடாக்கூட இருக்கலாம். இல்ல அவங்களுக்கு இருக்குற சந்தேகங்களை தீர்த்துக்க கூட இருக்கலாம். போன்ல ரொம்ப ஓவரா கேள்வி கேட்டா அந்த பொண்ணு திமிர் புடிச்ச பொண்ணுன்னோ இல்ல ரொம்ப அடக்கமா பேசுனா ரொம்ப நல்ல பொண்ணுன்னோ தப்பு கணக்கு போடாதீங்க.

கல்யாணத்துக்கு முன்னாடிதான் பையனுக்கு தம்/தண்ணி பழக்கமெல்லாம் இருக்கான்னு கேக்க முடியும். பழக்கம் இருந்தா ஆமான்னு சொல்லிட்டுப்போங்க இல்லன்னா இல்லன்னு சொல்லுங்க...(ஆனா உண்மைய சொல்லுறவங்க ரொம்ப கம்மி :-( ) அத விட்டுட்டு என்னப்பாத்து இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டாளேன்னு டென்சனாகக் கூடாது. ஒருவேளை அந்த பையனுக்கு பழக்கம் இருந்து கல்யாணத்துக்கு அப்புறம் தெரியவந்து, அந்த பொண்ணு ஏதாவது கேட்டா என்ன சொல்லுவீங்க? "இதெல்லாம் நீ கல்யணத்துக்கு முன்னாடியே கேட்டிருக்கணும்"... நிறைய வீட்டுல தன் பையன் தம்/தண்ணி அடிக்கிறதே தெரியாது.!!!


அடுத்த விஷயம் வேலை/படிப்பு, இப்போ இருக்குற நிலமைல கண்டிப்பா கேட்டுத்தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம். முடிஞ்சா டிகிரி முடிச்சி வேலைக்கு சேர்ந்தப்புறம் எந்த அளவு படிக்கிறதுல/ தன்னை மேம்படுத்திக்கிறதுல கவனம் செலுத்தியிருக்கான்னு தெரிஞ்சிக்கணும்.உதாரணத்துக்கு சர்டிபிகேஷன் மாதிரி..

அப்புறம் எதிர்கால திட்டங்கள் பத்தி கூட கேக்கலாம். வெளிநாட்டில் வேலை பாக்குறவங்களா இருந்தா, தற்காலிகமா வெளிநாட்டுல இருக்குறீங்களா இல்ல நிரந்தரமா இருக்க போறீங்களான்னு இப்பவே பேசிக்கலாம்.


அதே மாதிரி பையனும் பொண்ணுகிட்ட சில விஷயங்களை கேட்டு தெளிவு படுத்திக்கணும். உதாரணத்துக்கு சொல்லணும்னா, வேலைக்கு போறது/ படிக்கிறது. சில பெண்கள் கல்யாணத்துக்கு முன்னாடி வேலைக்கு போயிருப்பாங்க, ஒருவேளை கல்யாணத்துக்கு அப்புறம் போகவேண்டாம்ன்னு நெனைக்கலாம். பொண்ணு தேடும்போது வேலைக்கு போகலைன்னாலும் பரவாயில்லான்னு சொல்லிட்டு அப்புறம் அந்த பொண்ணு போகணும்ன்னு எதிர்பாக்ககூடாது. அதனால கல்யாணத்துக்கு முன்னாடியே இதெல்லாம் தெளிவா பேசிடுறது நல்லது.


அடுத்த விஷயம் சமையல், நீங்க நல்லா வாய்க்கு ருசியா சாப்பிடணும்ன்னு நெனைக்கிற ஆளா இருந்தா பொண்ணு சமையல் விஷயத்தில எப்படின்னு தெளிவா கேட்டுக்கோங்க. அந்த பொண்ணுதான்னு முடிவாயிடுச்சுன்னா உங்களுக்கு புடிச்ச சாப்பாட்டு அயிட்டங்களை உங்க அம்மாகிட்ட இருந்து கத்துக்க சொல்லிடுங்க.(என்னதான் அந்த பொண்ணு நல்லா சமைச்சாலும், எங்க அம்மா மாதிரி சமைக்கலன்னு சொல்லுறது ஒரு பேஷனாயிடுச்சு, ஆனா நம்ம அம்மா வயித்துல பொறந்த நம்ம அக்காவும், தங்கச்சியும் சமைக்கிறதே அம்மா சமைக்கிறது போல இல்லையே, வேற வீட்டுல இருந்து வந்த பொண்ணு எப்படி சமைப்பா அப்படின்னு யோசிக்கவே மாட்டாங்க.)

அதே மாதிரி பொண்ணுங்களும் கேக்கலாம், அந்த பையனுக்கு சமையல் ஆர்வம் எல்லாம் எப்படின்னு. எப்பவாவது நம்மளால செய்ய முடியாத நேரத்துல உபயோகமா இருக்கும்.


அடுத்த விஷயம் கடவுள் நம்பிக்கை, பையன் நாத்திகனா இருந்து பொண்ணு ஆத்திகமா இருந்தா பிரச்சனை கம்மி, அதே தலகீழா இருந்ததுன்னா, அந்த பொண்ணு பாவம். படுத்தி எடுத்துடுவாங்க. பையன் கொஞ்சம் முஞ்சிய சீரியஸா வச்சிகிட்டு எனக்கு நம்பிக்கை இல்ல, கட்டாயப்படுத்தாதன்னு சொல்லிட்டா அந்த விஷயத்த பொண்ணுங்க திரும்ப கட்டாயப்படுத்த முடியாது. அதே மாதிரி எல்லாம் பொண்ணுங்க சொல்ல முடியாது, குடும்பத்துக்கு ஏத்த பொண்ணு இல்லன்னு சுலபமா சொல்லிடுவாங்க. அதனால கல்யாணத்துக்கு முன்னாடியே இதப்பத்தி பேசிடுறதும் நல்லது.


அடுத்தது கவனிக்க வேண்டிய விஷயம் குடும்பப்பிண்ணனி, குடும்பத்திலிருப்பவர்கள் பழகும் விதம், நம்ம குடும்பத்துக்கும் நமக்கும் ஒத்துவருமா எல்லாத்தையும் நாமளே அலசி ஆராய்ஞ்சி பாத்துறணும் (இந்த விஷயத்துல வீட்டுல இருக்குறவங்கள நம்பக்கூடாது, கல்யாணத்த பண்ணுறவரைக்கும் சம்பந்திங்களை தூக்கிவச்சிட்டு ஆடுவாங்க, பின்னால பிரச்சனை வரும்போது நாமதான் மண்டைய பிச்சிகிட்டு இருப்போம்.)


இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு, என்னைக்கேட்டா, வரதட்சணை விஷயங்களைக்கூட பொண்ணும் பையனும் பேசிக்கிட்டா தப்பு இல்ல.. இதெல்லாம் பெரியவங்க விஷயம்னு சொல்லுவாங்க, ஆனா பொண்ணுக்குத்தான் டார்ச்சர் கொடுப்பாங்க. (சகோதரிகளே உஷார், இப்போ வரதட்சணைக்கு புது பேர் வச்சிருக்காங்க, "மரியாதை செய்யிறது"ன்னு. நேரடியா இது வேணும் அது வேணும்னு கேக்கமாட்டாங்க, ஆனா அவங்க எதிர்பாத்தது வரலன்னா, மாப்பிள்ளைக்கு மறுவீட்டு மரியாதை, சம்பந்தி மரியாதைன்னு புதுசு புதுசா கண்டுபுடிச்சு கறந்துடுவாங்க.)

பி.கு: இது உண்மையில நடந்ததுங்க, பொண்ணை மட்டும் கொடுங்க வேற எதுவும் வேணாம்ன்னு சொல்லிட்டு, நாத்தனார் மரியாதைன்னு புதுசா ஒண்ணு கண்டுபுடிச்சி ஒரு லட்ச ரூபாய்க்கு நகை வாங்கியிருக்காங்க நாத்தனாருக்கு. இந்த கொடுமையெல்லாம் என்னன்னு சொல்ல.

இவங்க வரதட்சணை வாங்குற டெக்னிக் எல்லாம் இன்னொரு இடுகையிலதான் போடனும் அவ்ளோ இருக்கு. :-)

சரி, பொண்ணு/பையன் பாக்குற விஷயத்துல இவ்ளோதான் இப்போ நியாபகம் இருக்கு. உங்களுக்கு ஏதாவது நியாபகம் வந்தா பின்னூட்டத்துல போடுங்க.